Thursday, December 22, 2011

மயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு

கருத்துரை:
மோனிகா (ஓவியர்), ராஜன்குறை (மானுடவியல் ஆய்வாளர்), ஸ்ரீகுமார் (திரைப்பட விமர்சகர்), சுபகுணராஜன் (ஆசிரியர், காட்சிப்பிழை)
மயக்கம் என்ன திரைப்படம் குறித்து மேஜையை சுற்றி அமர்ந்து உரையாடல் நடக்காவிட்டாலும் ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள், அவர்கள் நண்பர்கள் ஆகியோருக்கிடையே தீவிர கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது. அவற்றை ராஜன் குறை தொகுத்து, பிறருடைய ஒப்புதலுடன் இங்கே தருகிறோம். வழக்கமாக இடம்பெறும் ஸ்ரீகுமார், மோனிகா ஆகிய ஆசிரியர் குழுவினரின் கருத்துக்களுடன் சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பா.வெங்கடேசனின் கருத்தையும் இங்கே பதிவு செய்கிறோம்.
சுபகுணராஜன்: ‘மயக்கம் என்ன’ தமிழின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றில்லை. அதே வேளையில் அது மிகச் சாதாரண படமுமில்லை. இயக்குனர் செல்வராகவன் தொடர்ந்து தமிழ் திரையுலகின் கவனத்திற்குரியவராக இருப்பது, அவர் கதைக் களத்தை, அதன் வடிவை, அதன் இயங்கு தளத்தை தீர்மானிக்கும் முறைமைகளின் மூலமே இந்தத் திரைப்படம் எடுத்துக் கொண்ட கதைக்கரு தீவிரமானது என்றபோதும் அது புதிதானதன்று. கலை நேர்த்தியை அதன் உடனடியான வெற்றிகளும், கேடயங்களும், கொண்டாட்டங்களும் உறுதிப்படுத்துவதில்லை என்றபோதும், கலைஞனின் மனத்தின் அடியாழத்தில் அங்கீகாரத்திற்கான ஒரு சிறிய வேட்கை இருப்பதே இயல்பு. அதொன்றும் படைப்பு நெறிக்கு எதிரானதன்று. படைப்பூக்கமான செயல்பாடுகளின் உத்வேகம் அந்தப் புள்ளியில் நிறைவு கொள்ளலாம். கலையின் உன்னதமான தருணத்தை நோக்கிய பயணத்தில் கலைஞன், சமரசங்களற்ற நிலைப்பாடுகளால் அல்லுறுவதும், நிராகரிப்பின் வலிகளைச் சுமப்பதும் தமிழில் பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவே. உடனடியாக நினைவுக்கு வருவது கமல்ஹாசன் அவர்களின் ‘சலங்கை ஒலி’ சமரசங்களற்ற நடனக்கலைஞனின் காதலும், தோல்வியும், விரக்தியின் விளைவான குடியும் நட்பின் நேசக்கரமும் இருபடங்களையும் அநேகமாக நெருக்கமாகக் கொண்டு வரும் அம்சங்கள். முப்பதாண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கையாளப்பட்டிருக்கும் கதைக்கரு, அன்றைய மாறாத நேசங்களையும், தியாகங்களையும், சமகால உறவு நெறிகளுக்குள் இடம் பெயர்க்க முயன்றிருக்கிறது. ஏற்கனவே  ‘குணா’வை ‘காதல் கொண்டேன்’ ஆக மடைமாற்றியதைப் போல, ‘சலங்கை ஒலி’யின் அடிச்சரடான கலைஞனின் தோல்வியையும், வலியையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒற்றுமைகள் இந்த அளவில் மட்டுமே.

கார்த்திக்கை ‘ஜீனியஸ்’ எனும் நண்பர்களும், அவனுடைய தங்கையும் அதன் நுட்பமான அர்த்தம் கருதி அதைப் பயன்படுத்துபவர்களில்லை. அவர்களது ‘ஜீனியஸ்’ ஒரு அரைவேக்காட்டுத்தனமான ஒட்ட முடியாத கனவொன்றை துரத்துபவன் மட்டுமே. அவர்களின் ‘ஜீனியஸ்’ என்ற அழைப்பில் ஒரு சின்ன கிண்டலும் சாத்தியமே. ஆனால் தொடர்ந்த ‘ஜீனியஸ்’ என்ற உச்சாடனமே அவனை அதன் தீவிரத்தை நோக்கி நகர்த்திய வாய்ப்புக் கொண்டதாய் இருக்கக்கூடும். சலிப்பான லௌகீகத்திற்கும் உன்னதமான கனவிற்குமான இடைவெளியில் பிடிமானமற்று அலைகிறான் கார்த்தி. நண்பனின் தோழியின் மீதான உடனடி ஈர்ப்பை நிராகரிப்பின் வழி தவிர்க்க எத்தனிப்பதில் துவங்குகிறது அவனது போராட்டம். முறையான பயிற்சிகளற்று ‘நேஷனல் ஜியாக்ரபி’ போன்ற பத்திரிக்கைகளுக்கு நிழற்படம் எடுக்க முடியாது என்ற அறிவுரை அவனை தடை செய்வதில்லை. தொழில்நுட்பமற்ற அவனது நிழற்படத்தைப் பார்த்து ‘இது உனக்குச் சரியா வராது’ எனும்போது அவன் சினந்து கொந்தளிப்பதில்லை. தன் நிழற்படம் சிறந்ததுதான், அது பார்ப்பவர்களுக்குப் புரியவில்லை என்று அவன் ஒரு போதும் வாதிடுவதில்லை. போட்டோகிராபியே எனது ஆதர்சம், மிக மோசமான போட்டோகிராபர் என்றாலும், அதுவாக மட்டுமே இருப்பது மட்டுமே தனது மகிழ்ச்சி என்கிறான். மாதேஷ் கிருஷ்ணசாமி அவனது நிழற்படங்களை நிராகரிக்கும்போதும், அவருக்கு எதிராக ‘இன்னொரு முறை’ நல்லாப் பாருங்க சார்’ என்று இறைஞ்ச மட்டுமே செய்கிறான். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் யாழினியிடம் முதல் முறையாக கவசங்களற்றவனாக கரைந்து அழுகிறான். யாழினி அந்தப் பின்னிரவின் மெல்லிய ஒளியில் அவனது வாழ்வில் பிரவேசிக்கும்போது அவனது கலை ஆளுமை தனது நிஜமான ‘நொடி’யை கண்டடைகிறது. உடலளவில் அவளை விட்டு விலகி ஓடி வனங்களில் அலையும்போது, அவள் நினைவுகளை சுமந்தபடியே இருக்கும் ‘ஒரு நொடியில்’ தான் அந்த அதி அற்புதம் நிகழ்ந்து விடுகிறது. அற்புதம் கலைப்படைப்பாகவும், காதலாகவும் ஒரே தருணத்தில் நிகழ்ந்து விடுகிறது. மாதேஷின் நிராகரிப்பைத் தொடர்ந்து யாழினியின் அரவணைப்பில் கரைந்து அழும்போது அவனது கலை ஆளுமை அடுத்தப் புள்ளியை அடைகிறது. அவள் தொடர்பில் நடந்த முதல் தோல்வியை எளிதாக எதிர்கொள்பவன், கலை நேர்த்தியின் உன்னத தருணத்தைத் தரிசிக்க பின் நிகழும் அவமதிப்பை தாங்க முடிவதில்லை. அவனுக்குள்ளிருந்த கலை ஆளுமை விழிப்பு கண்டபின் அவனது துடுக்கத்தனம் ஒடுங்கி விடுகிறது. அதற்கு பின்னராக கலைஞனாக வாழும் காலம் முழுதும் கரைந்து அழுவது மட்டுமே அவனுக்குச் சாத்தியமாகிறது. மாதேஷின் துரோகத்தைக்கூட கண்ணீரால் மட்டுமே அவனால் எதிர்கொள்ள முடியும். தோல்வியும், விரக்தியும் அவனுள் இருந்த கலைஞனை செயலிழக்கச் செய்தபின் அவன் வெறும் குடிகி£ரனாகிறான். அவனுள் கலை ஆளுமை அமிழ்த்தி வைத்திருந்த வன்முறைகள் தாண்டவமாடத் துவங்குகிறது.
‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் காவியமான பாத்திரப் படைப்பு யாழினி பாத்திரமே. செல்வராகவனின் செய்நேர்த்தி அற்புதமாக வெளிப்படும் தருணமும் அதுவே. பெண்ணியவாதிகள் மட்டுமல்ல, ஆணாதிக்க நம்பிக்கையாளர்களைக்கூட எரிச்சலடையச் செய்யும் பாடலொன்றைக் கொண்ட திரைப்படத்தில் இவ்வளவு வலிமையான பெண் பாத்திரமொன்று சாத்தியமாகி இருப்பதே அபூர்வம். அந்தப் பாத்திரமும் தனக்கெதிரான வன்முறைகளை சகித்துக் கொண்டிருந்துவிட்டு, கருவிலேயே கரைந்து போன குழந்தைக்காக அவனை மௌனத்தில் தண்டிப்பது, ஒரு ஆண் பார்வையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் அதையும் மீறி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நிகழும் அபூர்வங்களில் ஒன்றுதான் இந்தப் பாத்திரம். பார்த்த மாத்திரத்தில் உருவாகிவிடும் ஈர்ப்பை, ஒரு நவீன பெண்ணியல்புடன் எதிர்கெள்கிறாள் யாழினி. அறிமுகமாகும் பொழுதில் அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆறு இலக்க எண்ணிக்கையில் சம்பாதிக்கும் உயர் மத்திய தர வர்க்க பெண்தான். அயல் கலாச்சாரத்தின் (?) மாதிரியான ‘டேட்டிங்’ உறவில் நம்பிக்கை கொண்டவள். அதற்கு அவள் தேர்வு செய்திருக்கும் சுந்தரும் அதே வர்க்கத்தைச் சார்ந்தவன்தான். கார்த்திக்கின் வார்த்தை வன்முறைகளை அதே ரீதியில் எதிர்கொள்பவள். அவனது போதாமையை இனங் காண்பதும், நேரடியாகச் சொல்லி விடுவதும் அவளுக்கு எளிது. ‘குடிச்சிட்டு மேல மேல வந்து விழும்’ டேட்டிங் நண்பனை தயக்கமின்றி நிராகரிப்பவள். எந்தவிதமான பின்புலங்களுமற்ற, வெறும் கனவைத் துரத்துபவனை உறுதியாக மணம் செய்து கொள்கிறாள். கார்த்திக்கை அறிந்து கொள்ள அவளுக்கு ‘டேட்டிங்’ தேவைப்படுவதில்லை. அதன் பின்னரான மண உறவில் சாவித்திரி, நளாயினி பாணி பெண்ணாகி விடுகிறாள். அவனது கனவை அவனைப் போலவே நம்பத் தொடங்குகிறாள். வாழ்வின் இருளடர்ந்த காலங்களை உறுதியாகக் கடக்கிறாள். அடை காப்பதுபோல காத்துவரும், உறுதிப்பாடு குழைந்த நிலையில் அழுது விடும் அவளை அரவணைத்து மாற்றுவழி சொல்லும் நண்பனை வன்முறையாகத் தாக்கிச் சாய்க்கிறாள். ஒரு அரவணைப்பில் தொடங்கிய உறவு, இன்னொரு அரவணைப்பை வன்மமாக நிராகரிப்பதன் வழி உறுதிப்படுகிகறது. தாயின் வாஞ்சையுடன் காத்துவரும் கணவன் கருவின் அழிவிற்கு காரணமானதும், அவனை கடுமையாகத் தண்டிக்கிறாள். திரைப்படத்தின் இரண்டாவது பகுதியை வளப்படுத்துவதே யாழினியின் பாத்திரப் படைப்பே. தரையில் தோய்ந்து போன ரத்தக் கறையை அரக்கித் தேய்த்து வெடித்து அழும் யாழினியே, சுய கழிவிரக்கத்தில் படைப்பூக்கமற்ற கோழையாய் வீழ்ந்து கிடக்கும் கார்த்திக்கின் மீட்சிக்கும் காரணமாகிறாள்.
கார்த்திக், யாழினி, சுந்தர், தங்கை, சுந்தரின் அப்பா, நண்பர்கள் என்ற பாத்திரப் படைப்புகள் செயல் தளத்தில் வீர்யமாக இருந்தாலும், அவற்றின் நம்பகத் தன்மை மிக மிகக் குறைவே. செல்வராகவன் பாத்திரங்களையன்றி, வகைமைகளையே உருவாக்கியுள்ளார். சுந்தரின் அப்பா தவிர யாருமே அங்கு மூத்த தலைமுறையினராக இல்லை. அவரும் ஆகச் சிறந்த அப்பாவின் மாதிரி மட்டுமே. யாழினியின் பின்புலம் முற்றிலுமாக அடையாளம் இன்றி இருக்கிறது. கார்த்திக் அவனுக்கொரு தங்கை என்பது தவிர அங்கு யாரும் யாருக்கும் ரத்த உறவுகள் இல்லை. வகைமைகளின் மாதிரிகளை பாத்திரமாக்கியதன் பயன் விளைவு இயல்பு வாழ்வுத் தருணங்கள் அரிதாகி விடுகிறது. கார்த்திக் பாத்திரப் படைப்பில் அவன் ஒரு நிழற்படக் கலைஞனாக ஆவதற்கான எத்தனம் கொண்டவன் என்பதை விட ஒரு சினிமா உதவி இயக்குனர் வாய்ப்புத் தேடுபவனின் சாயல்தான் வெளிப்படுகிறது. மாதேஷிடம் உதவியாளனாக சேரத் தவிக்கும் தவிப்பு சினிமாத் துறையில் வாய்ப்பு தேடும் சாயலைக் கொண்டிருக்கிறது. கார்த்திக் ஒரு புகைப்படக் கண்காட்சிகூட வைப்பதில்லை என்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வது. நிழற்படத் துறையின் தவிர்க்க முடியாத அம்சமில்லையா கண்காட்சி. நிழற்படக் கலைஞனின் கதை என்பதால் திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் இரவுக் காட்சிகளாகவும், லைட் அன்ட் ஷேட் காட்சிகளாகவுமே உள்ளன. பகல் நேரக் காட்சிகள் மிகஅரிதனாதாகவே இருக்கின்றன. இந்தக் கறாரான தேர்வு தினசரி வாழ்வின் தருணங்களை முற்றிலுமாகத் தவற விட்டு விடுகிறது.
ராஜன் குறை: சுபகுணராஜன் கடைசியாக கூறும் விஷயங்கள்தான் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. புகைப்படக்கலையில் ஆர்வம் கொள்ளும் ஒருவருக்கு என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன, அவர் எவ்வாறெல்லாம் தன் திறமையை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வார் என்பது போன்ற அம்சங்கள் படத்தை வழிநடத்தவில்லை. என்னதான் புகழ்பெற்றவர் என்றாலும் ஊரில் ஒரே ஒரு வைல்ட் லைஃப் போட்டாகிராபர்தான் இருப்பார் என்பதுபோல மாதேஷே கதியென்று தனுஷ் சுற்றுவது வேடிக்கையாக இருக்கிறது. மேலும் தன்னுடைய படத்தை அவர் பெயரில் பிரசுரித்துவிட்டார் என்பது ஏமாற்றத்தை தரும் அதே நேரத்தில் தன் திறமையைப் பற்றிய உறுதிப்பாட்டையும் அது அவருக்கு தரவேண்டும் இல்லையா? அந்த இடத்தில் அவருடைய முயற்சிகள் பல திசைகளில் பெருகவேண்டும். அவர் ஏன் தன் மனைவியிடமும், நண்பர்களிடத்திலும் அந்த முக்கியமான நிகழ்வை பகிர்ந்து கொள்வதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைவிட முக்கியமான ஒரு பிரச்சினையை பேசலாமா வேண்டாமா என்றே தெரியவில்லை. காரணம், சில சமயங்களில் நடைமுறை வாழ்விலிருந்து தனித்தியங்கும் சினிமா என்று தமிழ் சினிமாவை மன்னிக்கத் தோன்றினாலும், இது போன்ற படங்கள் ஒன்றும் கிராமத்து மக்களுக்காக எடுக்கப்படுவதில்லை. தங்களை மேதைகளாக கருதிக்கொள்ளும் செல்வராகவன் போன்ற விடலைத்தனம் மாறாத இயக்குனர்கள் கொஞ்சமும் திரைக்கதையில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் பிரச்சினையை சொல்லியேவிடுகிறேன். தனுஷ் காட்டில் அந்த பறவைகளை படம் எடுத்தது டிஜிட்டல் காமிராவில். அவ்வளவு அபூர்வமான புகைப்படத்தை நிச்சயம் அவர் கம்ப்யூட்டரில் தரவேற்றம் செய்து வைத்திருப்பார். அதை ஒரு ஸ்டுடியோவில் பிரிண்ட் போட்டிருக்கிறார். நண்பர்களிடம் காட்டியிருப்பார். இதையெல்லாம் மாதேஷ் கிருஷ்ணசாமி புகைப்படத்தை திருடுவதற்கு முன்னால் யோசிக்கமாட்டாரா? ஏற்கனவே புகழின் உச்சியில் இருக்கும் அவருக்கு இந்த திருட்டுத்தனம் செய்ய வேண்டிய தேவை என்ன? அப்படியே சந்தர்ப்பவசமாகத் திருடினாலும் தனுஷிற்கு ஏதாவது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து சமரசம் செய்துகொள்ள பார்ப்பாரா, அதைவிட்டுவிட்டு அவரை விரோதித்துக்கொள்வாரா? தனுஷ் தன்னிடம் உள்ள பிம்பத்தை இணையத்தில் போட்டு, நண்பர்களின் சாட்சியத்தையும் போட்டு மாதேஷை சங்கடப்படுத்த முடியாதா? மாதேஷ் மான நஷ்ட வழக்கு போட்டாலும் கூட தனுஷிடம் போதுமான சாட்சியங்கள் இருக்குமே? திரைக்கதையை திருடுவதுபோல புகைப்படத்தை திருடுவது தேவையா, சாத்தியமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாமா? சரி அப்படியே ஒருவர் செய்தேவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளலாம். எந்த காரணத்தினால் தன் கலையின்மீது காதல் கொண்ட தனுஷ் அதற்காக வெகுண்டு எழாமல் துவண்டு போகவேண்டும்? தன் திறமைக்கு மறைமுகமாக கிடைத்த அங்கீகாரம் ஏற்படுத்தும் துணிவின் காரணமாக இன்னம் ஆர்வமாகத்தானே செயல்படவேண்டும்? இங்கு வேறு ஏதோ கலைவடிவத்தை யோசித்து செய்யப்பட்ட திரைக்கதை இறுதியில் தற்செயலாக புகைப்படக்கலையாக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. பொதுவாக அங்கீகாரம் கிடைக்காத கலைஞன் என்பதற்கான உருவகமாகத்தான் தனுஷ் கதாபாத்திரம் இருக்கிறதே தவிர புகைப்படக்கலை என்ற குறிப்பிட்ட கலையின் சூழலை பிரதிபலிப்பதாக இல்லை. புகைப்படம் என்ற அம்சத்தை எடுத்துவிட்டால் படத்தின் பிற இழைகள் பல்வேறு படங்களில் பார்த்ததாகத்தான் இருக்கிறது. உதாரணமாக தமிழ் சினிமாவில் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எல்லோரும் முட்டாளாகத்தான் இருக்கவேண்டும் என்பது நியதியா என்ன? குடிகாரர்கள், மனநலம் குன்றியவர்கள் ஆகியோரால் வரும் பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக, புரிந்துணர்வுடன் கையாளும் நிர்வாகிகள் நாட்டில் இருக்கவே மாட்டார்களா? கூட்டமாகப் போய் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவதுதான் ஒரே ஸ்டைலா? பஞ்ச் பேக் போல துணைக்கதாபாத்திரங்கள் வீர வசனம் பேசுவதை வாங்கிக் கட்டிக்கொள்வதுதான் அவர்கள் விதியா? படமெடுக்கும்போதே இது போன்ற தேய்ந்துபோன (நீறீவீநீலீஙபீ) காட்சிகளை எப்படி அலுப்பில்லாமல் எடுக்கிறார்கள் என்பதே புரியவில்லை. நானும் மத்தியதர வர்க்க மனோபாவத்தின் கடுமையான விமர்சகன் என்பதுடன் என் வாழ்விலேயே நான் தனுஷ் கதாபாத்திரம் போல சில காலம் வாழ்ந்தவன். ஆனால் இப்படி ஃபார்முலாக் காட்சிகளை என் வாழ்வில் சந்தித்ததில்லை.
மோனிகா: புகைப்படம் விஷயத்தில் பல நகைச்சுவை சம்பவங்கள் நிகழ்கின்றன. குமுதம் பத்திரிகை ஒரு யானையை அட்டையில் போடுகிறது என்பதற்கும் மேலாக தனுஷ் ஆப்பிரிக்க யானையை இந்தியக் காட்டில் படம் எடுத்திருப்பது உச்சகட்ட சாதனையாக இருக்கிறது (யானையின் தந்தங்கள் சாதாரணமாய் காணப்பட்டாலும் காதுகள் இந்திய யானைகளைக் காட்டிலும் பெரியதாக உள்ளன). இந்தப் பிரச்சினையை கடந்து ஆண், பெண் உறவின் அம்சங்களைப் பற்றி சில விஷயங்களைக் கூற வேண்டியிருக்கிறது. ஜீனியஸ் என்பதே ஆணின் அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது என்பது ஒரு பிரச்சினை. ஆணின் மீது பரிந்துணர்வும், பெண்ணின் தியாகத்திற்கான பாராட்டுதலும் வினியோகம் செய்யப்படுவதில் இருக்கும் உள்ளார்ந்த ஓரவஞ்சனை வழமையானது (காலம் காலமாக தமிழ் படங்களில் கையாளப்பட்டுவரும் கதையாடல்தான் இது). இது குறிப்பிட்ட இரண்டு கதாபாத்திரங்களின் பிரச்சினையில்லை. அவர்களை பாலியல் சமன்பாடுகளின் உருவகமாகப் பார்த்தால்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கான தீர்வு பெண்களை குடிப்பவர்களாகவும், ஆண்களை அவர்களுக்காக தியாகம் செய்பவர்களாகவும் சித்தரிப்பது அல்ல. அந்தக் குடி, அதன் விளைவுகளை உண்மையிலேயே பெண்ணின் பார்வையில் சித்தரிக்க முடியுமா என்பதே கேள்வி. நான்கு படங்களில் அதை சாதித்துவிட்டால் எந்த ஆணும் குடிக்க மாட்டான். ஜீனியஸை புரிந்துகொள்வதும், ஜீனியஸின் குழந்தையை பிரசவிக்க முடியாததற்காக வருந்துவதையும் தவிர வேறு எந்தந்த நுண்ணுணர்வுகள் பெண்ணிடம் சாகடிக்கப்படுகின்றன என்பதை யோசிக்கவும் சாத்தியமற்றுத்தான் இதுபோன்ற கதையாடல்கள் அமைகின்றன. இரும்பு மனுஷி என்ற பட்டம் எரிச்சலூட்டுகிறது. இந்தப் படத்தில் அமைந்துள்ள காட்சிகளின் யதார்த்தம் ஒரு புறம் சரியாக இருந்தாலும், உதாரணமாக மனம் தளர்ந்த நேரத்தில் குடிகாரக் கணவனின் நண்பன் வாழ்க்கைத் துணையாக முயலும் காட்சியை சொல்லலாம், மறுபுறம் பெண்ணுக்கு கொடுக்கும் அனுதாபம். அவள் ஜீனியஸுக்காக செய்யும் தியாகத்தை நோக்கி திருப்பப்பட்டு அதன் காரணமாக ஒரு வெறும் துணைக்கதாபாத்திரமாக நிறுவப்படுகிறாள்.
ஸ்ரீகுமார்: என்னால் தனுஷ் பாத்திரம் உருவாக்கப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக முற்பாதிக்கும், படத்தின் பிற்பாதிக்கும் அவர் கதாபாத்திரத்தில் தொடர்ச்சியில்லாமல் இருக்கிறது. புகைப்படக்கலையில் அவ்வளவு ஆற்றலும் ஆர்வமும் கொண்ட அவர் எதற்காக முதலில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் முரடனாக இருக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு பெண்ணை முதல் முறையாகப் பார்க்கும்போதே “முண்டக்கலப்பை” என்று சொல்லும் அளவு கொச்சையான மனிதனாக நாகரீக சமூகத்தில் பழகும் ஒருவன் எப்படி இருக்கமுடியும் என்று புரியவில்லை. அவர்கள் ஒன்றும் பள்ளி மாணவர்களோ, கல்லூரி மாணவர்களோ கூட கிடையாது. பிற்பாதியில் அவர்களுக்கிடையில் நிலவுப்போகும் ஆழமான அன்பிற்கு முற்பாதியில் எந்த தயாரிப்பும் இல்லாமல் இருக்கிறது. தனுஷின் நண்பனை டேட் செய்யத் தொடங்கி தனுஷிடம் மனதை பறிகொடுப்பதும் நம்பும்படியோ, பரிவுகொள்ளும்படியோ இல்லை. அவரே பிற்பாதியில் அவ்வளவு பெரிய தியாகியாக உருவாவதும் சரியான தொடர்ச்சியுடன் இல்லை. பல விதங்களிலும் படத்தின் முற்பாதியும், பிற்பாதியும் ஒட்டாமல்தான் இருப்பதாகப் படுகிறது. மற்றபடி தனுஷின் நடிப்பு பல்வேறு காட்சிகளில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றலுள்ளவராக அவர் உருவாகி வருகிறார்.
பா.வெங்கடேசன்: தனுஷ் ஒரு கலைஞனுக்குள்ள தவிப்பை வெளிப்படுத்துகிறார் என்பது சரிதான். ஆனால் முற்பகுதியில் அவருக்குக் கிடைத்த படைப்பெழுச்சி மிக்க தருணம் அவருக்கு மீண்டும் ஏன் வாய்க்காமல் போகிறது என்பது புரியவில்லை. அவர் காட்டில் புகைப்படம் எடுக்கும் காட்சி படத்தில் மிக அழகாக வந்திருக்கிறது. அது அவர் ​கை​யைவிட்டு நழுவிப்​போகும்​போது அ​தைவிட அற்புதமான தருணத்​தை ​இயக்குனர் எப்படிக் காட்டப்​போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு மிக அதிகமாக இருந்தது. அது மிகப்​பெரிய சவாலாக இருந்திருக்கும். உண்​மையில் தனுஷினு​டைய கதாபாத்திரம் அவன் வாழ்வில் அப்படிப்பட்ட படைப்பூக்கமான தருணங்க​ளை, ​தொடர்ச்சியாக அ​மையச் சாத்தியமில்​லை​யெனினும், அவ்வப்​போது எதிர்​கொள்ளும்படியான ஒன்றாகத்தான் துவக்கத்திலிருந்​தே காட்டப்பட்டிருக்கிறது. ​உதாரணமாக அந்த மூதாட்டி​​யைப் பு​கைப்பட​மெடுக்கும் காட்சி. முற்பாதியில் அந்த  அற்புதமான தருணமும், பிற்பாதியில் குமுதம் அட்​டைப்படம் மூலமாக அவருக்குக் கிடைக்கும் சர்வதேச அங்கீகாரமும் திரைக்கதையில் இடம்பெறுவது அவருக்கு கலைஞன் என்ற முறையில் நியாயம் செய்வதாக இல்லை. ப​டைப்​பை உருவாக்கும் ம​னோநி​லை​யேயன்றி அந்தப் ப​டைப்பல்ல அவரு​டைய சர்வ​தேச அங்கீகாரத்​தை படத்தின் பார்​வையாளர்க​ள் அங்கீகரிப்பதற்கான காரணம். அவருடைய சிறந்த படைப்பு களவாடப்பட்ட பிறகு, மீண்டும் ஒரு முறை அப்படிப்பட்ட படைப்பூக்கமிக்க தருணம் அவருடைய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவரை விடுதலை செய்யும் என எதிர்பார்த்தேன். அப்படி நடக்காதது ஏமாற்றமாக இருந்தது. கலையனுபவத்தை விட அங்கீகாரத்தையே முக்கியமாக கருதும் போக்கினை படம் வலுப்படுத்துவதாகத் ​தோன்றியது.

2 comments:


  1. We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


    Best Digital Marketing Agency in Chennai
    Best Content Marketing companies in Chennai
    Best SEO Services in Chennai
    leading digital marketing agencies in chennai
    digital marketing agency in chennai
    best seo company in chennai
    best seo analytics in chennai

    ReplyDelete
  2. maenyuk situs slot gacor

    Situs dengan pelayanan terbaik & terpercaya , MENANG BERAPAPUN KAMI BAYAR

    LINK ALTERNATIF : https://maenyuk.co/
    LINK TELEGRAM RESMI : https://t.me/maenyukgameonline

    ReplyDelete